search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளிடம் பழைய பாலம்"

    கொள்ளிடத்தில் தண்ணீர் முற்றிலுமாக வற்றிய பின்னர் தான் தொழில் நுட்ப குழு தயாரிக்கும் திட்டத்தின் அடிப்படையில் பாலத்தை இடிக்கும் பணி தொடங்கும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார். #VellamandiNatarajan
    திருச்சி:

    முக்கொம்பு அணைக்கு கூடுதல் தண்ணீர் வரத்தால் பாதுகாப்பு கருதி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. தற்போது 1 லட்சத்து 67 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் செல்கிறது.

    இதனால் அந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1928-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமையான இரும்பு பாலம் சேதம் அடைந்தது. அந்த பாலத்தை தாங்கி நிற்கும் ஆறாவது தூணில் கடந்த புதன்கிழமை இரவு திடீரென விரிசல் ஏற்பட்டது.

    இந்த விரிசல் நேற்று முன்தினம் காலை மேலும் அதிகமானது. இதனால் அந்த தூண் அப்படியே தண்ணீருக்குள் இறங்கியபடியே சென்றது. நேற்று காலை சுமார் 10 அடி ஆழத்திற்கு தண்ணீருக்குள் இறங்கியது. எனவே இந்த பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    இந்த பாலத்தை நேற்று இரண்டாவது நாளாக ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். இந்த பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கலெக்டர் ராசாமணி ஆகியோர் கூறியதாவது:-

    கொள்ளிடத்தில் மேலும் நீர் திறப்பு அதிகரிக்கும் பட்சத்தில் ஆறாவது தூண் முற்றிலுமாக தண்ணீருக்குள் இறங்கி பாலத்தின் அந்த பகுதி அப்படியே இடிந்து விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பாலத்தில் யாரும் செல்ல முடியாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த பாலத்தை இப்போது உடனடியாக இடிக்க முடியாது.

    கொள்ளிடத்தில் தண்ணீர் முற்றிலுமாக வற்றிய பின்னர் தான் தொழில் நுட்ப குழு தயாரிக்கும் திட்டத்தின் அடிப்படையில் அரசுக்கு கருத்துரு அனுப்பி அனுமதி கேட்கப்படும். அதன் பின்னர் தான் பாலத்தை இடிக்கும் பணி தொடங்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார். #TNMinister #VellamandiNatarajan
    திருச்சி கொள்ளிடம் பழைய பாலம் பகுதி இடிந்து விழுந்தாலும் புதிய பாலத்திற்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி கூறினார். #Kollidamriver
    திருச்சி:

    முக்கொம்பு அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 47 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு சீறிப்பாய்ந்து செல்கிறது. வெள்ளம் ஏற்படுத்திய மண் அரிப்பால் கொள்ளிடம் பழைய பாலத்தின் 18-வது தூண் உடைந்து ஆற்றுக்குள் மூழ்க தொடங்கியது. நள்ளிரவு பாலத்தின் தூண் மேலும் ஆற்றுக்குள் சரிந்தது.

    எந்த நேரத்திலும் பாலத் தின் இரும்பு பகுதி இடிந்து கொள்ளிடம் ஆற்றுக்குள் விழலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் ராசா மணி நள்ளிரவு 2 மணிக்கு கொள்ளிடம் பழைய பாலத்தை சென்று பார்வையிட்டார்.



    தொடர்ந்து அதிகாரிகளுடன் காவிரி, கொள்ளிட கரையோரம் உள்ள முக்கியமான இடங்களுக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டார். இதற்கிடையே மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் மேலும் 50 ஆயிரம் கன அடி நீர் இன்று இரவு திறந்து விடப்படும் என கூறப்படுகிறது.

    அந்த நீர் முழுவதையும் முக்கொம்புவில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை கொள்ளிடத்தில் மட்டும் 2 லட்சம் கனஅடி நீருக்கு மேலாக சீறிப்பாயும். அப்போது பழைய கொள்ளிடம் பாலம் மேலும் பாதிப்படையலாம் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து தலா 15 பேர் கொண்ட 2 பேரிடர் மீட்புக் குழுவினர் திருச்சிக்கு நேற்று வந்தனர். அவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். திருச்சி, முசிறி, திருப்பராய்த்துறை உள்ளிட்ட சில இடங்களில் கரையோர பகுதி வீடுகள், குடிசைகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அச்சத்தில் வெளியேறி விட்டனர்.

    மேலும் 50 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்படவுள்ளதால் கரையோர பகுதி மக்கள் என்ன ஆகும் என கவலையில் உள்ளனர்.

    இது குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :-

    திருச்சி மாவட்டத்தில் வெள்ள எச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. இன்று 50 ஆயிரம் கனஅடி நீர் கூடுதலாக திறக்கப்பட்டாலும் எந்த ஆபத்தும் ஏற்படாமல் கொள்ளிடத்தில் திறந்து விடப்படும்.

    திருச்சி மாவட்ட வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்புத்துறை, வட்டார வளர்ச்சி, அலுவலர்கள், போலீசார், மாநகராட்சி என அனைத்து துறைகளும் இணைந்து வெள்ளப்பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளில் 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ளார்கள்.

    இதுதவிர பேரிடர் மீட்புக் குழுவும் வந்துள்ளது. மின் மோட்டாருடன் உள்ள நவீன போட்டுகளுடன், 10-க்கும் மேற்பட்ட போட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு கீதா புரம், காக்காதோப்பு, பஞ்சக்கரை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று அதிகாரிகள் நிலைமையை கண்காணித்தனர். நான் நள்ளிரவில் கொள்ளிடம் பழைய பாலத்தை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டேன். இடிந்த தூண் பகுதி கூடுதலாக ஆற்றுக்குள் சரிந்துள்ளது.

    பழைய பாலம் பகுதி இடிந்து விழுந்தாலும் புதிய பாலத்திற்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை. இது குறித்து தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 50 ஆயிரம் கனஅடி நீர் வரும் போது கொள்ளிட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    திருச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Kollidamriver


    கொள்ளிடம் ஆற்றில் 60 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் மேலும் அதிகரித்துள்ளது. அதிகாரிகள் அந்த பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #Kollidamriver
    திருச்சி:

    கர்நாடக அணைகளில் அதிக அளவில் மழை பெய்யும் காலங்களில் காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து பின்னர் அங்கிருந்து திறக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை கடந்து திருச்சி வழியாக முக்கொம்பு வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் கல்லணைக்கும், கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீர் கடலுக்கும் செல்கிறது.

    காவிரி ஆற்றில் அதிக அளவில் நீர்வரத்து உள்ள காலங்களில் பாதுகாப்பு கருதி கொள்ளிடம் ஆற்றில் காவிரியை விட கொள்ளிடம் ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் கீழணைக்கு சென்று அங்கிருந்து வடவாறு (வீராணம்), ராஜன் வாய்க்கால் உள்ளிட்டவை நிரம்பி மீதமுள்ளவை கடலில் கலக்கிறது.

    கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1924-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் ஸ்ரீரங்கத்தையும், நெ.1 டோல்கேட் பகுதியையும் இணைக்கும் வகையில் இரும்பு பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். பின்னர் அந்த பாலம் பயன்படுத்த முடியாத அளவுக்கு பலவீனம் அடைந்ததால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்னை நேப்பியர் பாலம் போன்று திருச்சி கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட்டது.

    இதையடுத்து பழைய கொள்ளிடம் பாலத்தில் குறைவான எடைகொண்ட வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்றுவர அனுமதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வரத்து காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் பழைய கொள்ளிடம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் இரும்பு பாலத்தில் சிமெண்டு மற்றும் கருங்கற்களால் கட்டப்பட்ட 23 தூண்களை கொண்ட பாலத்தின் 18-வது தூணில் விரிசல் ஏற்பட்டதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த திருச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி, கண்காணிப்பு பொறியாளர் பழனி, உதவி பொறியாளர் வீரமணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



    நேரம் செல்ல செல்ல தூணில் ஏற்பட்ட விரிசல் அதிகமானது. இதையடுத்து கொள்ளிடம் பழைய பாலத்தின் வழியாக போக்குவரத்தை தடை செய்தனர். அந்த பாதையில் தடுப்பு அமைக்கப்பட்டது. திருவானைக்காவலில் இருந்து டோல் கேட், உத்தமர் கோவில், பிச்சாண்டார் கோவில், தாளக்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி கொள்ளிடம் ஆற்றில் 60 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் மேலும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பாலம் இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் அச்சம் எழுந்துள்ளது. அதிகாரிகள் அந்த பகுதியில் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #Kollidamriver


    ×